Skip to main content

8. அக்ஷரப் பிரஹ்ம யோகம் - பகவத்கீதை - The Eternal Way

 

   

THE ETERNAL WAY
Author: Roy Eugene Davis

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்) 
Tamil Re-Phrasing, Reflections and Remarks 
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)

பகவத் கீதை எட்டாம் அத்தியாயம்

8. அக்ஷரப் பிரஹ்ம யோகம் 
(பூரண சத்ய யோகம்)

அத்தியாய முகவுரை:

நிலைத்த சுயம்பு இருப்பான பேருணர்வே பூரணம் என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால், அதற்கும் மேலானது எதுவுமில்லை. இயற்கையின் குணங்களால் உருவான மனதால் அதன் உருக்காட்சி புலப்படாது. உள்ளுணர்வாலும் நேரடி அனுபவத்தாலும் அதன் இருப்புண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

அர்ஜுனன் கேட்டான்: 
8.1. பூரண சத்யமாகிய பிரஹ்மம் என்றால் என்ன ?  உன்னத ஆத்மா (அத்யாத்மா) எது? கர்மா என்றால் என்ன? உலகங்கள் (அதிபூதம்) மற்றும் தேவதைகள் (அதிதைவதம்) எனும் மூலக்கூறுகளின் ஆட்சியெல்லை மற்றும் தன்மை என்ன?

உட்பொருள்:
பூரண, சர்வ வியாபக, வரம்பற்ற பேருணர்வு என்பது யாது? தலைமையிலுள்ள ஆத்மப் பேருணர்வு எது? எது கர்ம விளைவுக்குக் காரணம் ? உலகங்கள் மற்றும் அவைகளை நியமமாக இயக்கும் தலைதேவதைகள் எனும் மூலக்கூறுகளின் ஆட்சியெல்லை மற்றும் தன்மை என்ன? 

8.2. இவ்வுடலால் செய்யும் தியாகம் (அதியக்ஞம்) என்பதன் அடிப்படை என்ன ? சுயநியமத்தைக் கைக்கொண்டவனால் அவனுடைய அந்திமக் காலத்தில் நீ எவ்வாறு அறியப்படுகிறாய் ?

உட்பொருள்: 
மாற்றத்தை விளைவாக உடைய புனிதக் கொடைகள் வழங்குவதின் முகாந்திரம் என்ன ? ஆன்ம ஞானத்தில் நிலைத்த சாதகன் தன் உடலை விடும் காலத்தில் இறைமைக்கு எப்படி விழிப்படைகிறான் ?

உரை:
இக்கேள்வி அம்புகளனைத்தும் புதிதாய் ஆன்ம பயணம் மேற்கொண்ட சாதகனின் தன்மைகள். ஆசிரியனின் மேல் மரியாதை மேலிட்டவனாயும் கற்பதில் ஆர்வம் மிக்கவனாயும் சரியான கேள்விகள் கேட்கிறான்.

கிருஷ்ணன் பதில் கூறினான்.
8.3. அக்ஷரப் பிரஹ்மம் எனும் பூரண சத்யமானது, அழிக்கமுடியாத நித்யம். அது உன்னதப் பேராத்மாவின் (அத்யாத்மா) உள்ளியல்பு. அது தோன்றுதலாகி உலகை வியாபித்து படைப்புகளின் சார இருப்பாக வியக்தப்படுகிறது.  கர்மா என்பது பிரபஞ்ச வெளிப்பாட்டினை விளைவிக்கும் தூண்டுதல் காரணியும்,  ஆன்மாக்களை வெவ்வேறு சூழலில் பருவுடலுடன் வியக்தம் ஆக்குபவையும் ஆகும். 

உரை:
நிர்குணமான மாறா தூய பேருணர்வு பூரணம் எனப்படும். அதனை உன்னதப் பேராத்மா அல்லது உன்னதப் பேரிருப்பு எனலாம். அது பிரபஞ்சத்தின் இறைதள இருப்பிலிருந்து வெளிப்பாட்டின் எல்லா படிநிலைகளிலும் பரவியிருக்கிறது. ஆன்மாக்கள் என்பவை மனம் மற்றும் உடலுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதான உன்னதப் பேராத்மாவின் வியக்த அலகுகளே. 

மூலகாரணங்களின் வலிய விசைகளிலிருந்து விளைவுகள் தோன்றுகின்றன. இறைமையிலிருந்து வெளியோடி வருவதான ஓம் ஸ்வரத்தின் தூண்டுதலால் ஆன்மாக்கள் மனம் மற்றும் ஜடத்துடன் ஒன்றி பிரபஞ்சத் தோற்றம்  அமைகிறது. தெளியா நிலையாலோ ஆன்ம விழிப்பற்றோ ஆன்மாக்கள் பிரபஞ்ச வலிய விசைகளாலும், சூழலிலுள்ள வலிய விசைகளாலும், வலிய ஆசைகளாலும் ஆட்டுவிக்கப்படுகின்றன. அவைகளை விடுவிப்பதான ஆன்ம விழிப்படையும் வரை ஆன்மாக்கள் ஆட்டுவிக்கப்படுகின்றன. 
குணங்களின் குறுக்காட்டங்களால் தோற்றுவிக்கப் படுவதான தேவதைகள்தான் ஜடஇயற்கையின் செயல்களை இயக்குகிறது.

8.4. மாற்றத்திற்குரிய ஜடஇயற்கையின் (அதிபூதம்) மீது குணங்கள் செலுத்தும் ஆதிக்கமே வெளிப்படு தோற்றங்களின் மற்றும் செயல்களின் மூலமாகும். இறையாத்மாதான் (அதிதெய்வம்) இந்த  மாற்றத்தை வழிப்படுத்தும் சாதனமாகும். இவ்வுடம்பில் நான்தான் யாகத்தின் (அதியக்ஞம்) அடித்தளமாவேன். 

குறிப்பு:  
ராமகிருஷ்ண மடத்தின் “அண்ணா” உரையையும் இங்கு சேர்த்து வாசிப்பது உசிதம்:
உடல் தாங்கியவருள் சிறந்தவனே! அழியும் இயல்புடையது அதிபூதம் எனப்படும். புருஷனே அதி தெய்வம். இந்த தேகத்தில் நானே அதியக்ஞம்.

உட்பொருள்:
ஜடஇயற்கையில் குணங்களின் கலப்புக் கூட்டினால் விளைபவைதான் வெளித்தோன்றிய உரு மற்றும் செயல்களின் அடிப்படை. இறைமையின் வாழ்வூட்டும் அம்சம்தான் எல்லா வகைமாதிரிகளின் உருமாற்றத்திற்கு காரணம். உடலிலும் பிரபஞ்சத்திலும் அர்ப்பணித்தலும் கொடைகளும் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டவை. 

உரை: 
ஒரு சாதகன் தன் எண்ணங்களை, மன வேகங்களை, செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறான். இதுதான் நமது வாழ்விற்கு சுயலாப எதிர்பார்ப்பின்றி நாம் அளிப்பதான கொடை. படைப்புகளின் பரிணாமவளர்ச்சிக்குத் தோதாக பிரபஞ்ச காரியங்கள் தடையற்ற ஓட்டம் கொண்டுள்ளன. இறைமையுடன் லயம் பெற, நம் செயல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். 

8.5. என்னை தியானித்தவாறே உடலை விடும் சாதகன், என்னில் ஒன்றிய நிலையை அடைகிறான். இதில் எதுவும் ஐயமில்லை. 

உட்பொருள்:
உயிர் மாறாட்ட காலத்தில், தூயப் பேருணர்வின் தளத்தில் மனமொருத்திருந்தால், ஆன்மா இயல்பாகவே ஆன்மானுபூதிக்கு விழிப்படைகிறது.  இது நிச்சயமாக நிகழ்கிறது. 

8.6.  உடலை விடுகையில் எந்நிலையில் மனம் லயித்திருக்கிறானோ, அந்நிலையையே அவன் அனுபவிக்கிறான்.

Comments